Cine



மங்கள்யான் விண்கலம் இன்று ஏவப்படும் காட்சி, தூர்தர்ஷனிலும், இஸ்ரோ இணையதளத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
மங்கள்யான்
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பையும், அங்கு மீத்தேன் வாயு இருப்பது குறித்தும் ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மங்கள்யான் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புகிறது.பி.எஸ்.எல்.வி–சி25 ராக்கெட் மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணி 38 நிமிடத்திற்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் என்ற ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவுகிறது.இந்த காட்சியை காண வரும்படி இஸ்ரோ தலைவர் விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
கவுண்ட்டவுன்
மங்கள்யான் விண்கலம் ஏவுவதற்கான 56 மணி 30 நிமிட நேர கவுண்ட்டவுன், நேற்று முன்தினம் காலை 6.08 மணிக்கு தொடங்கியது. கவுண்ட்டவுன் தங்குதடையின்றி நடந்து வருகிறது. திரவ எரிபொருள் நிரப்பும் பணியும் முடிவடைந்து விட்டது.விண்கலம் ஏவுவதற்கு முந்தைய ஏற்பாடுகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. வெவ்வேறு மையங்களில் பணியாற்றி வரும் இஸ்ரோ விஞ்ஞானிகள், இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்.விஞ்ஞானிகள் உள்ளிட்ட இந்திய மக்கள் அனைவரும் விண்கலம் ஏவப்படுவதை காண ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
நேரடி ஒளிபரப்பு
எனவே அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் மங்கள்யான் விண்கலம் ஏவப்படும் நிகழ்ச்சி தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.இஸ்ரோ நிறுவனமும் தனது இணையதளத்தில் இந்த காட்சியை நேரடியாக ஒளிபரப்ப இருக்கிறது. இணையதள முகவரி www.isro.gov.in
திருப்பதியில் சாமி தரிசனம்
இதற்கிடையே, ‘மங்கள்யான்’ விண்கலம் வெற்றிகரமாக பறக்க வேண்டி ‘இஸ்ரோ’ தலைவர் ராதாகிருஷ்ணன் தனது மனைவியுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
நேற்று முன்தினம் இரவு அவர் திருமலைக்கு வந்தார். கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு, கோவிலில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் லட்டு, தீர்த்தப்பிரசாதம், சாமி படம் ஆகியவை வழங்கப்பட்டன. தொடர்ந்து அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினார்கள்.
வரவேற்பு
சாமி தரிசனத்தின்போது கோவில் துணை அதிகாரி சின்னம்காரிரமணா, வரவேற்பு அதிகாரி தாமோதரம் உள்பட பலர் உடன் இருந்தனர்.
முன்னதாக, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த இஸ்ரோ தலைவருக்கு பிரதான நுழைவு வாயிலில் திருமலை–திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் ஏழுமலையான் கோவிலில் நடந்த சுப்ரபாத சேவையிலும் கலந்து கொண்டு இஸ்ரோ தலைவர் மீண்டும் சாமி தரிசனம் செய்தார். அப்போது பி.எஸ்.எல்.வி–சி25 ராக்கெட்டின் மாதிரி வடிவத்தை ஏழுமலையானின் பாதங்களில் வைத்து வழிபட்டார். விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பறக்கவும் வேண்டிக்கொண்டார்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் தரிசனம்
பின்னர் இஸ்ரோ தலைவர் விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் தனது மனைவியுடன் நேற்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சென்றார். அங்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.அவருக்கு, கோவில் நிர்வாக அதிகாரி ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மற்றும் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

0 comments:

Post a Comment

 
Top